Sunday, May 3, 2015

சேது சமுத்திரத் திட்டம்
இந்தியா டுடே நவம்பர் 19 2014





சேது சமுத்திரத் திட்டம் -சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுங்கள்
இந்தியா டுடே-நவம்பர் 19-2014,,,,விருந்தினர் பக்கம்-எடிட் செய்யப்படாதது

சேது சமுத்திரத் திட்டம் மண்ணைத் தோண்டுகிற ஒரு திட்டம், அதுவும் நீருக்குள் இருக்கும் மண்ணை .
தமிழகத்தில் ஆட்சி மாறும்போதும், நடுவண் அரசில் ஆட்சி மாறும்போதும் இத்திட்டம் உயிர்ப்பிக்கப்படும். உண்மையில் அறிவியலுக்கும் அரசியலுக்கும் ஏற்படும் மோதல்களும், அறிவியலlலில்லாதவை அரசியலாக்கப்படும் காட்சி நாடகங்களே இத்திட்டம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை மூன்று பார்வைகள் உள்ளன. சேது சமுத்திரத் திட்டம் தமிழனின் நீண்ட காலக் கனவு, அது உடனடியாக நிறைவேறினால் தமிழர்கள் மகிழ்ச்சியடைவார்கள், தமிழகம் கொழிக்கும் என்று திராவிடக் கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களும் நீண்ட நாட்களாகச் சொல்லி வருகிறார்கள்.
இரண்டாவது பார்வை, இத்திட்டம் லாபம் தரும் திட்டமாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில், அறிவியல் பூர்வமாகச் சாத்தியமில்லை என்று மக்கள் அறிவியலாளர் மருத்துவர் ரமேஷ் உட்பட இந்தியாவின் அறிவியலாளர்கள் இதில் அடங்குவர். மூன்றாவது பார்வை, இது சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கு, எனவே திட்டமே தேவையில்லை எனக் குரல் கொடுக்கு சுற்றுச்சூழல் வாதிகள்.
ராமர் பாலம் என்ற பெயரில் சேதுக் கால்வாய் திட்டம் சேதுமதத் திட்டமாக மாறியபோது, அணு உலையைச் சுற்றுச்சூழல் பார்வையில் எதிர்த்தவர்கள் கூட சேதுசமுத்திரத் திட்டத்தையும் மீண்டும் ‘தமிழனின் கனவு’ என்று ஆதரிக்கத் தொடங்கினர். எளிமையாகச் சொன்னால் அறிவியல், சுற்றுச்சூழல் இரண்டையும் தாண்டி அரசியலே இத்திட்டத்தை வழி நடத்துகிறது. ஏற்கனவே காங்கிரஸ், தி.மு-.க கூட்டணியில் 1000 கோடி செலவு செய்து தோண்டிய கால்வாய் இப்போது எங்கே இருக்கிறது?
இப்போது மீண்டும் மதவாத பா.ஜ.க. தமிழகத்தில் வேறூன்றுவதற்காக இத்திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. ராமர் பாலத்தை இழக்காமல் மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்கிறார்கள். எல்லாம் சரிதான், ஆனால் சுதந்திரதிற்குப் பிறகு எல்லா வளர்ச்சித் திட்டங்களும் மாபெரும் சுற்றுச்சூழல் அழிவையே ஏற்படுத்தியுள்ளன. பிரமாண்டமான அணைக்கட்டுகள் தொடங்கி, அணு உலைகள் வரை நன்மைகளை விட தீமைகள் அதிகம். ஆனாலும், சுற்றுச்சூழல்வாதிகளின் குரலை யாரும் செவிமடுப்பதில்லை.
சேது சமுத்திரத் திட்டம் ஏன் வேண்டாம்?
முதலில் சேதுக் கால்வாய்த் திட்டம் தோண்ட இருக்குமிடம் உலகின் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதி என யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவாகும். இங்கு அரிய பவளப்பாறைகளும், 600 வகை மீன்களும், கடல்குதிரைகளும், மிக அரிய அவுளியா (கடல்பசு)க்களும் நிறைந்த பகுதியாகும். 21 சிறுதீவுகள் இங்கு உள்ளன. இன்றும் அளவிடமுடியத நுண்ணுயிர்களும் பெருகி உள்ளன. மேலும் எப்போதும் எல்லோராலும் உதாரணமாகச் சொல்லப்படும் பனாமா கால்வாய் உட்பட எல்லாக் கால்வாய்களும் நிலத்தில் தோண்டப்பட்டவை, கடலில் தோண்டப்பட்டவையல்ல. கடல் என்னும் ஒற்றை உயிரில் நீர் மட்டும் அலைவதில்லை மணலும் நெடுந்தூரம் பயணம் செய்கிறது.
தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று கடலின் நீரோட்டங்களையும் மணலின் ஓட்டத்தையும் மாற்றும் தன்மையுடையது. மேலும், மண்குவிதல், கடலின் தரையின் கீழே என்ன இருக்கிறது, புயல் சூறாவளி போன்ற காலங்களில் மண் குவிதல் அதிகமாக உருவாகு நிலை இதைப்பற்றியெல்லாம் எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆய்வும் செய்யப்படவில்லை.
எனவேதாம் இந்த கடினமான பாறை மற்றும் மணலை எடுப்பதற்கு எந்த நிறுவனங்களும் முன்வருவதில்லை. தி.மு.க அரசில் ஆயிரம் கோடி செலவழித்து தோண்டப்பட்ட இடம் இப்போது என்னவாயிற்று என்று நாம் ஆய்வு செய்ய வேண்டும். பயணம் செய்யும் மணல் நிச்சயம் தோண்டப்பட்ட இடத்தை மூடியிருக்கும். ஆனாலும், கடலின் மண்ணை தொடர்ந்து தோண்டுவோம் என்று நடுவண், மாநில அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையின் செயல்பாடுகளைக் கணக்கெடுத்தாலும் கூட இத்திட்டம் நமக்கு அச்சத்தையே தருகிறது.
மணலை எடுத்து எங்கே கொட்டுவீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை எந்தவிதப் பதிலுமில்லை.ஒரு வேளை இத்திட்டம் நிறைவேறுமானால் நீர் முற்றிலும் மாசுபட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்கும் எந்தவிதப் பதிலுமில்லை. மேலும் பவளப்பாறைகள் அழிப்பு, கடற்கரை மண்ணரிப்பு, வெடிகுண்டை உடைத்து மணலைப் பிளக்க வேண்டியிருக்கும். இவையெல்லாமே கடலையும் மீனவர்களையும் அழிக்கும். சுமார் 5 லட்சம் மீனவர்களாவது இடம்பெயர்வார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. கப்பல்களின் அதிகமான போக்குவரத்து மேலும் மீனவர்களுக்கும்,கடல் உயிரினங்களுக்கும் அழிவையே தரும். இவ்வளவு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருந்தும், இத்திட்டம் வருவதென்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும். ராமர் பாலம், மத நம்பிக்கையென்றால் இப்பூவுலகை அழித்தால் அது நம்மை மீண்டும் அழிக்கும் என்பது சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கை, அறிவியல். சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுங்கள், சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிடுங்கள்...
வசீகரக் கோமாளி ஃபெடரிக்கோ ஃபெலினி-  ஆர்.ஆர்.சீனிவாசன்
சலனம் இதழில் 1993ல் நான் எழுதிய கட்டுரை
உலக சினிமா சாதனையாளர்கள் - 5
ஃபெட்ரிக்கோ ஃபெலினி

- சீனியம்மாள் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார்

”எனது படங்கள் அன்பிலிருந்து பிறப்பவை, தர்க்கத்திலிருந்தல்ல” என்றான் இத்தாலிய மேதை ஃபெலினி. கலையுணர்ச்சியின் உச்சியில் தவழும் கலைஞர்கள் இருக்கும் இத்தாலியில் இருந்து ஃபெலினி போன்ற இயக்குனர்கள் உருவாவது விசித்திரமானதல்ல எனினும் அவனது படங்கள் விசித்திரமானவை. லூயிபுனுவலைப் போல திரையின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது சுயத்தை தர்சித்தவன் ஃபெலினி. ஆளற்ற, வெறுமையான தெருக்களின் விசித்திரமான இரவுகளை அவனது காமிரா பதிவு செய்தன. யதார்த்தத்தின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு கனவுகளிலும், ஃபேண்டஸி புதைமணலிலும் மூழ்கியிருந்தான். அவனது உலகம் முட்டாள்களின் உலகமாயிருந்தது. கோமாளிகளின் வெண்ணிற முகங்கள் உங்கள் கனவுகளில் வந்து துன்புறுத்தும் நடிகர்களின் உடல்களிலிருந்து அமானுஷ்யமான அசைவுகளையும், முகபாவங்களையும், உருவாக்கினான். நீங்கள் எல்லாரும் தொலைத்த, இந்த நூற்றாண்டின் அனைத்து அவலங்களுக்கும் மாற்றுச்சக்தியான குழந்தைகளின் இன்னொஸன்ஸை அவன் முழுமையாக அறிந்து வைத்திருந்தான். நமது கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் போல அவனது கலைப்படைப்புகளின் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளின் உலகமாகவே அவனது உலகம் இருந்தது. ஆளில்லாமல் காமிரா தானாகவே சென்று படமெடுத்திருக்குமோ என்று நினைக்கும்படி அகோரத் தனிமையில் நிரம்பியிருந்தன அவனது படிமங்கள். கடல்சூழ்ந்த இத்தாலியின் ஈரமான காற்றை நீங்கள் ஸ்பர்ஸிக்கலாம் தியேட்டரில் இருந்தபடியே.
அவன் பிறந்த ரிமினி நகரத்தில் இருந்து தனது 12 வயதில் ஊருக்கு வந்த நாடோடி சர்க்கஸின் கோமாளிகளின் வண்ண உடைகளிலும், தொப்பிகளிலும் மயங்கி வீட்டை விட்டு ஓடிப்போனான். பிறகு திரும்பி வந்து 17வயதில் படிப்பையும்விட்டு வெறுமையான தெருவாழ்க்கையின் சுவாரஸ்யத்திலும், போக்கிரிகளின் உலகத்திலும் வாழலானான். Florenceக்கு வந்து கார்ட்டூனிஸ்ட், புரூப்ரீடர் போன்ற வேலை, தீரமிகு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற வெறியோடு ரோடுக்கு வந்து பறக்கும் மனிதன் Flash Garden சித்திரக்கதைக்கு படம் வரைந்த போது அவனும் பறந்தான். பின்பு படங்கள் (தி நைட்ஸ் ஆஃப் காபிரியா) graphic artist வேலை இறுதியாக திரைப்படத்துறைக்கு ராபர்ட்டோ ரோஸலினியின் படங்களுக்கு துணையாகப் பணிபுரிந்ததன் மூலம் வந்தான். சினிமாவையும் சர்க்கஸின் உலகமாகவே கருதினான். அவனது ஆரம்பக் காலப் படங்கள் பெரும்பான்மையானவற்றில் கோமாளிகளே தாவிக் குதித்தனர். வெள்ளை முகங்கள், நீளமான கோடுகளையுடைய தொள தொள டவுசர்கள், குஞ்சங்கலுடன் கூடிய குல்லாய்களோடு முன்வைத்தது. உணர்ச்சியின் விளிம்பிலேயே சஞ்சரிக்கும் கலைஞர்கள் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுத்துவது போல அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றி ஃபெலினியை புகழின் உச்சிக்கு கொண்டு தள்ளியது. மிருக்குணம் கொண்ட மனிதன், பெண்ணின் அன்பினால் திருந்துவது போன்ற ஜனரஞ்சகமான செண்டிமெண்டல் கதை. இத்தாலிய நியோரியலிசத்தின் பாதிப்பை இப்படத்தில் காணலாம். செண்டிமெண்டலை எதற்காகப் பயன்படுத்துவது என்பதுதான் முக்கியம். தனது படங்களின் வழியாக மக்களைப் பற்றி பேசினான், மனிதமனத்தின் ஆழ்ந்த அகவயமான பின்னல்களை அவனது படம் ஆராய்ந்தது.
ஒரு இரக்கமான இதயம் கொண்ட கழைக்கூத்தாடிக்கும், மரணத்தின் விளிம்பில் சிரிக்கும் ஒரு முட்டாளுக்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண்ணைப் பற்றி La strada பேசியது. ஃபெலினியின் மனைவி Guilettina Massina, ஜெல்சோமினா என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு முகம் இருக்கமுடியுமா என்று சரித்திர விபத்து மாதிரி கில்லடினா மாஸ்னாவின் முகம் அமைந்திருந்தது. அப்படி ஒரு இன்னொஸண்டான முகமே படத்தை நகர்த்திச் சென்றது. திரையில் உணர்ச்சி வாதத்தின் கருத்தை முன்வைத்த இப்படத்தில் கழைக்கூத்தாடியாக ஆண்டனி குயின். முட்டாளாக வரும் கோமாளி ஏசு கிறிஸ்துவைப் போல அன்பின் செய்தியைப் பரப்புபவனாகவும் கூழாங்கற்களின் தத்துவத்தை பேசியவாறு உயிர்விடுகிறான். பிறகு ஜெல்சோமினாவும் இறக்கிறாள். இறுதியாக ஆண்டனி குயின் திருந்துகிறார் கடலின் மடியில். பலஹீனமான இதயங்களின் உன்னதங்களில் கரையும் ஜெல்சோமினாவின் பாத்திரம் முதன்முதலாக feminism பற்றிய அறிக்கையை முன்வைத்தது என்கிறார்கள் விமர்சகர்கள். இருக்கலாம்.
ஃபெலினியின் அடுத்த படம் La Dolce vita (The Sweet Life) ஒரு புகைப்படக் கலைஞனை முன்வைத்து ரோமின் வாழ்வை படம் பிடித்திருக்கிறார். ஃபெலினியின் படங்களை ‘Personal Fantasyu’ என்றும் ஒரே கட்டத்தினுள் சுலபமாகப் போட்டுவிடலாம். சுயம் சார்ந்த பேண்டஸி இயல்பான ஒன்றல்லவே. குழந்தையின் புதிர்களுள் ஒன்று அது. ஃபெலினிக்கு குழந்தைகளைப் பிடிக்கவில்லை. அவர்களோடு குழந்தையாக சண்டை போடத் தெரிந்திருந்தது. இப்படத்தில் பத்திரிக்கைத்துறை, திருப்தியுறாத தயாரிப்பாளர்கள் அவர்களோடு உள்ள உரசலை முன்வைக்கிறது. இறுதியாக இவ்வுலகைவிட்டுப் பறப்பதாக முடிகிறது. புனிதத்தை நோக்கி தற்கொலைக்கொப்பான வீழ்தலை நோக்கி.
லூசி பிரண்டல்லோவின் நாடக உத்திகளைப் போல தன்னுடைய 8 ½ (எட்டரை) திரைப்படம் எடுப்பதைப் பற்றிய திரைப்படமாக அமைந்தது. உலகத் திரைப்பட வரலாற்றிலேயே இது முக்கியமான படம். தான் எந்த விஷயத்தைப் பற்றி திரைப்படம் எடுத்தாலும் அது சுயசரிதமாகவே முடிகிறது என்று ஃபெலினி தன்னுடைய படங்களைப் பற்றிக் கூறுவதுண்டு. 8 ½ முழுமையான சுயசரிதப் படம். திரைப்படம் என்பது கனவைப்போல, இசையைப் போல என்னும் உணர்வைத் தருகிறது இப்படம். (Guido) கிடோ என்னும் இயக்குனராக வரும் மாஸ்திரியோனி ஃபெலினியின் அனைத்து குணாதிசயங்களையும் கொண்டிருந்த தார், ஃபெலினியின் தொப்பி, நடை , உடை பாவனைகள் அனைத்தும் இந்தப்படத்தின் ஆரம்பமே கனவிலிருந்து, ஃபெலினியின் சுயமான தேடல்களும், சுயத்தை நோக்கிய தேடல்களும் ஒவ்வொரு பிரேமிலும் தியானத் தன்மையோடு அமைந்திருந்தது. முழுமையான குழப்பங்களை, இறுக்கங்களை கனவுகளை குழந்தைப்பருவ நினைவுகளை மந்திரக் கலைடாஸ்கோப்பினை திருப்புவது போல இதன் வடிவம் இருந்தது. ஃபெலினி தன்னைப் பற்றிப் பேசுவதென்பதே எல்லாருக்குமானதாக இருந்தது. காமிரா என்பது அலையும் கருவி என்றது 8 1/2 . கிடோவின் பிரச்சனை என்னவெனில் தான் ஒரு எளிமையான திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்பதுதான். (8 ½ என்று இப்படத்திற்கு பெயர் வைத்த காரணம் ஃபெலினி ஆறு முழுப்படங்களையும், 3 படங்களுக்கு துணையாகப் பணி புரிந்ததையும் சேர்ந்து இதனை 8 ½ என்று அழைத்தார் என்பது உங்களுக்குத் தெரியும்).
த்ரூஃபோவினால் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம் கேபிரியாவின் இரவுகள் (The Nights of Cabiria) . இது விபச்சாரியின் வாழ்க்கையைப் பற்றிய படம். பெலினியின் மனைவியே விபச்சாரியாக நடித்திருந்தார்.
இவ்வுலகத்தின் கொடுரமான யதார்த்தத்தில் சிக்கித் தவித்து தனது இன்னொஸன்ஸை தக்கவைக்க முடியாமல் அலையும் விபச்சாரியின் பாத்திரம் ஃபெலினிக்கே உரியது. செண்டிமெண்டலின் எல்லைக்கே சென்றுவிடும் ஃபெலினி இப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பாணியில் இன்னொரு சாகசத்தை வைத்தார். சுயமான தர்சன நோக்கு கொண்ட ஃபெலினி பெண்ணின் சக்தியை தனது படைப்பின் உந்துசக்தியகவே கருதினார்.
தன்னுடைய திரைப்பட்த்தின் வடிவம் குறித்துப் பேசும் ஃபெலினி திரைப்படங்கள் உரைநடைக் கதையாடலை எப்போதோ விட்டுச்சென்று, கவிதையை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறதென்றான்.
தான் இப்போது தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற மரபான கதை சொல்லும் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு கவிதையாக தன்னுடைய படம் இருக்கிறதென்றார். ஜீலியட் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ், (Juliet of the Sprits) அவ்வகையான படமே, இதுவும் ஒரு பெண்ணின் பார்வையோடு எடுத்தபடம். இப்படத்தில் மாயாவாதம், அதீத கற்பனைகள், நம்பமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டு படம் நகர்கிறது. இதிலும் ஃபெலினியின் மனைவியே நடித்திருந்தார். தன்னுடைய மனைவியின் வாழ்க்கையை மனைவிக்காக, மனைவியை வைத்து எடுத்திருந்தார். அவரது முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் சேர்ந்துவிட்டது.
ஃபெலினி பாதிக்காத இயக்குனர்களே இல்லையெனலாம், பெர்க்மன் முதல் ஃபாஸ்பைண்டர் வரை அனைவரும் அவருடைய கலையுணர்ச்சியினால் ஈர்க்கப்பட்டனர். நவீன சினிமாவின் பின்னலான மொழியை தொழில் நுட்ப மேதைமையுடன் வெளிப்படுத்துவதென்பது ஃபெலினிக்கு கை வந்த கலை. தனது திரைப்படங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பது அவருக்குத் தெரியும். நியோரியலிசம், சர்ரியலிசம் என்று அவர் படங்களை வரிசைப்படுத்தினாலும் அவருடைய எல்லாப் படங்களிலும் அவர் செய்த ஒரே வேலை தன்னுடைய சுயத்தை நோக்கி இயங்கியதேயாகும். படம் முடியும்வரை தெரிந்திருக்கவில்லை. நுட்பமான புதிர்களிலும் , புதிரின் நுட்பத்திலும் நிறைந்தபடி படிமங்களில் மிதந்தார். திரைப்பட வரலாற்றின் Unique என்று இவரை அழைக்கலாம். சத்யஜித்ராய்க்குப் பிறகு போன வருடம் ஆஸ்கர் சிறப்பு விருது பெற்ற ஃபெலினி இவ்வருடம் அக்டோபர் 31 அன்று மரணமடைந்தார். ஒரு விமர்சகர் சொல்வது மிகவும் பொருந்தும். ஒன்று நீங்கள் ஃபெலினியை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். எந்த இந்தியனாவது நிராகரிக்க முடியும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
திரைப்படப் பாணி வரலாறு:
வெரைட்டி லைட்ஸ் (1951)
தி வைட் ஷேக்(1952)
தி லோபர்ஸ் (1953)
லவ் இன் தி சிட்டி(1953)
லா ஸ்ட்ராடா (1954)
தி ஸ்விண்டில்(1955)
தி நைட்ஸ் ஆப் காப்ரியா (1956)
லா தோல்சேவித்தா (1959)
பொக்காச்சிலோ 70 (1961)
8 ½ (1963)
ஜீலியட் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ்(1965)
ஸ்பிரிட்ஸ் ஆஃப் தி டெட்(1967)
சட்டிரிக்கான் (1969)
தி கல்வன்(1970)
ரோமா (1971)
அமர்கார்ட் (1973)
கேசனோவா (1976)
ஆர்க்கெஸ்ட்ரா ரிகெர்ஸல்(1978)
ஜிஞர் அண்ட் ஃபிரெட்(1985)
சலனம் டிசம்பர் 93- ஜனவரி 94
thanks-Thamizh studio அருண்
நியுட்ரினோவுக்கு எதிராக அம்பரப்பரின் உறுமி..


நியுட்ரினோ ஆதரவாளர்கள் கவனிக்க,,,,,,,,இது வெறும் ஆராய்ச்சித் திட்டம், மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று சொன்னார்கள்,,,நியுட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தடை உத்தரவு வந்தவுடன் அம்பரப்பர் மலைக்கு அம்பரப்பர் சாமியை வழிபட மக்கள் திரண்டனர்,,,ஆனால் காவல் துறை அனுமதிக்க வில்லை,,மலைக்கு
ச் செல்லக் கூடாது என்றனர்,,,,வழிபடும் உரிமை கூட மறுக்கப் பட்டது,,,,சனிக்கிழமை அன்று தடையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்...4048 தெய்வங்கள் வாழும் அம்பர்பர் மலை உடைக்காதே,,மலையின் நடுவே எங்கள் வனக்குறத்தி இருக்கிறாள்,நூற்றாண்டு காலமாக அவளை மலையி ஏறி விளக்கிட்டு வழிபடுகிறோம்,,வனக்குறத்தியை அழிக்காதே,,,,,
மலையை விட்டு நியுட்ரினோ திட்டம் வெளியேற்றப் பட வேண்டும் என்றனர்,,,,தேவராட்டம் ஆடி, பொங்கலிட்டு தங்கள் எதிர்ப்பையும்,மகிழச்சியையும் வெளிப்படுத்தினர்,,,,

மக்களின் மலையை மக்களிடமே கொடு...
நியுட்ரினோ திட்டமே அம்பரப்பர் மலையை விட்டு வெளியேறு.....